BIRDS MASS SUICIDE AT JATINGA VILLAGE, ASSAM, INDIA
அஸ்ஸாமின் ஜடிங்கா கிராமம் ஒரு சிறிய மலைக்கிராமம். ஆனால், இது உலகப்புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தளம். உள்நாட்டு, வெளிநாட்டு பறவை ஆர்வலர்களை இக்கிராமம் ஈர்த்துக்கொண்டுள்ளது. காரணம், இக்கிராமத்தில் ஆயிரக்கணக்கில் குவியும் பறவைகள், கூட்டாக தற்கொலை செய்வதே.
இதற்கான காரணம் பலரும், பலவாறாக சொன்னாலும் உண்மையான காரணம் தெரியவில்லை. புவியியல் ரீதியிலான காந்தப்புலம் அந்தப் பறவைகளை குழப்பி விடுவதால், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இந்தப் பறவைகள் தற்கொலை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், வெளிநாடுகளிலிருந்து வலசை செல்லும் பல்வேறு பறவைக் கூட்டங்கள், இந்தக் கிராமத்தில் ஓரிரு நாட்கள் தங்கி இரை தேடி பிறகு வழக்கம் போல் செல்கின்றன. அவற்றில் எந்தப் பறவையும் தற்கொலை செய்வதில்லை.
உள்நாட்டுப் பறவைக் கூட்டங்கள் மட்டுமே தற்கொலை செய்கின்றன. இது இன்று நேற்றல்ல… நூற்றாண்டுகளாய் இது தொடர்கிறது. முதலில் Pigeon வகை புறாக்கள் மட்டுமே இப்படி தற்கொலை செய்தன. இப்போதோ, சுமார் 30 வகைப் பறவைகள் கூட்டாக தற்கொலை செய்கின்றன.
ஒரு மாபெரும் பறவைக்கூட்டம் திடீரென்று அதிக அளவு இரை தின்று உடல் எடையை அதிகமாக ஆக்குகின்றன. பின், மொத்தமாக பறக்கத்துவங்கும் அந்தப் பறவைக்கூட்டம், ஒரே விதத்தில் சுற்றிச்சுற்றி சுழன்று பறந்து பறந்து, பின் வேகமாக மரங்களிலும், பாறைகளிலும், கட்டிடங்களிலும் தங்களை மோதிக்கொள்கின்றன. மோதிய வேகத்தில் பலத்த காயம் பட்டு உயிரை விடுகின்றன.
எந்த ஒரு பறவை ஆராய்ச்சியாளராலும் இதை ஆராய்ந்து காரணம் சொல்ல முடியவில்லை.